வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு விழாவின் போது சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் ஆற்றிய உரை .
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!!
வேதாத்திரி மகரிஷியின் நூற்றாண்டு விழாவின் போது உரையாற்றிய கத்தோலிக்க கிறிஸ்தவரான "பாதர் ஜெகத் கஸ்பர் அவர்கள் , மகரிஷி ஒரு புதிய பண்பாட்டு கல்வியை இந்த உலகிற்கு தந்துள்ளார். நான் அவரின் சீடராக மாறவும் விருப்பமாக உள்ளேன் என்றார் ! அந்த சுவையான பேச்சை நீங்களே கேட்டுப்பாருங்களேன் !
தீட்டா அலை'யிலும், 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கா. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.
அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.
"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.
உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும்போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.
மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால் (1) ஐம்புலன் கருவிகள் கெடும் (2) உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர்,
"சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்டேயுலகு" - என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும்.
விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.
Proper usage of five senses